திங்கள், 17 ஜூன், 2013

பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?

பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள வாசனை திரவிய நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சில வகை நச்சுத் தன்மையுள்ள ரசாயனங்களை பயன்படுத்துவோருக்கு நரம்பு சார்ந்த கோளாறுகள் மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு முறையாகிலும் பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்தில் (லிப்ஸ்டிக்) 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளன.

சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவிகிதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ், குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பற்பசை, ஷாம்பூ போன்றவை நீண்ட காலத்திற்கு காலாவதியாகாமல் இருப்பதற்காக அவற்றில் சிந்தெட்டிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதன் விளைவாக மார்பக புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மைக்கு பெண்கள் உள்ளாகும் அபாயம் உள்ளது. இதுபோல், பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது.

தற்கால இளம் பெண்கள் விரும்பும் "அற்புத" வளர்ச்சி, முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்து உள்ளது.

இவ்வகை சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.