அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழுவினர் சர்க்கரை குறித்து ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், சர்க்கரை மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. எனவே சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டும். இதற்கு அரசு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் 'The Toxic Truth About Sugar' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அக்கட்டுரையில் போசணக்குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமன்றி சர்க்கரையானது மனித உடலின் வளர்சிதை மாற்றத்தினைப்(Metabolism) பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.