சனி, 24 மார்ச், 2012

முடக்குவாதத்திற்கு அருமருந்தாகும் மஞ்சள்

பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்திற்கு மஞ்சள் மருந்தாக பயன்படுகிறது என அமெரிக்க ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உணவுகளில் பயன்படுத்தப்படும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைகழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சியாளர் பாசிர் அகமது மற்றும் லிசா லேபிடஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்துக்கு மஞ்சள் சிறந்த மருந்தாக விளங்குவது தெரியவந்தது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, நடுமூளையின் ஒரு பகுதியில் டோபமைன் எனப்படும் இராசயன பொருளை உற்பத்தி செய்யும் செல்கள் அழிவதால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் ஏற்படுகிறது.
பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நடுக்கம் இருக்கும். கை, கால்கள் திடீரென விறைத்துப் போகும். நடப்பது, அசைவது தாமதமாகும். இந்நோயால் உலகம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளையில் சில வகை புரோட்டீன் பொருள்கள் ஒரு தொகுப்பாக சேர்ந்து இறுகுவதால்தான் டோபமைன் உற்பத்தி செய்யும் செல்கள் அழிகின்றன.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற ரசாயன பொருள், புரோட்டீன்கள் இறுக்கம் அடையாமல் தடுக்கிறது. இதனால் நரம்பு மண்டலத்தில் பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்